Skip to main content
கடிகாரம் - காலம்

- காலத்தை கட்டுவதற்கு இல்லை
கடிகாரமே நீ !
பஞ்சாய் பறக்கும்
நேரத்தை நூற்பதற்கு
----------------------------------------
- கடிகாரமே நேரத்தை
ஆள்வது போல் மமதை
கொள்ளாதே எங்கள்
தேவைக்கே ஆக்கிக்கொண்டோம்
உன்னை மொழி போல
--------------------------------------------
- மதிப்பற்ற ஒன்றை
பரிசாகக் கொடுப்பதற்கும்
பொருளாதார சிக்கலுக்குள்
தருவதற்கே அன்பளிப்பாகிறாய்
கடிகாரமே
-----------------------------------------
- கடிகாரமே நேரத்தை
ஆள்வது போல் மமதை
கொள்ளாதே எங்கள்
தேவைக்கே ஆக்கிக்கொண்டோம்
உன்னை நூல் போல
நூல் மொழியாள முடியாது
நீயும் காலமெனும் மொழியாள
முடியாது
-----------------------------------
- கடிகாரமே
நீ வெளியில் தானே
உன் மொழியை
மட்டும் எம் மனதிலே
செருகினாய்
------------------------------------
- கடிகாரமே உன்னையும்
உன் மொழியினையும்
உதாசினப் படுத்தவே
காதலும் காதலர்களையும்
உருவாக்கினோம்.
--------------------------------------
- சந்தோஷ கணங்களில்
பறக்கிறாய் பறவை போல்
துன்பறும் வேளைகளில்
நடக்கிறாய் நத்தை போல்
-------------------------------
- கடிகாரமே
இயற்பியலிலும் உயிரியலிலும்
எனவிரு முகங்கள் கொண்டாய்
ஒத்திசைந்து போவதையறிய
கொடிய ஆய்வுகள் நடந்ததே
(பிக் பாசை விட )
---------------------------------------
- இன்புறா உயிர்களுக்கு
நின்னால் ஒலிக்கப்படும்
ஒவ்வொரு நொடி சத்தமும்
மரணத்தின் நினைவுருத்தும்
---------------------------------------
- வாழ்வை செவ்வனே
கழிப்பவர்க்கு நொடிமுள்
நகர்தலெல்லாம் உள்ளம்
நொடிய செய்யாது
-------------------------------------------
- யோக முறைகளில்
உனைப்போல் சீராக
மூச்சினை விட்டால்
உன்னை வெகுகாலம்
பார்க்கலாம் இதுவே
முயல் ஆமை கதைக்கரு
-----------------------------------------
- என் மனதை உன்னோடு
கட்டமாட்டேன்
விரும்பி வாழ்வதை மட்டும்
கணக்கிடுவேன் நீயோ
வாழினும் வாழாவிடினும்
கணக்கிடுவாய்
--------------------------------------
- காலமே நீயொரு கானல் நீர்
உனையே எண்ணினால் கண்ணில் நீர்
-----------------------------------------------
- சுதந்திரத்தின் உச்சியில்
வாழ நினைப்பவன் நான்
உன்பலம் கொண்டு
எனையாள நினையாதே
சார்பியல் கொண்டு
கட்டுக்குள் வைப்பேன்
என் அறிவினால்
--------------------------------------
- உள்ளம் இயற்பியல் கடிகாரத்தோடு
இணைக்கப் பட்டிருந்தால்
நன்றே உயிர்களுக்கு உணர்ச்சிகளால்
பாதிப்படையாது உயிரியல் கடிகாரம்
அதனால் தாக்கம் கொள்ளா
நம் உணர்வுகள்
----------------------------------------------------
- காலத்தையே பார்ப்பவரெல்லாம்
பேரார்வத்தால் எதனையும்
செய்ததுண்டோ ?
இல்லை அவரைப் போல்
காலத்தை சரியாக
கழித்தவருண்டோ ?
---------------------------------------------------------
- காலமென்னும் கடலினிலே
கடிகாரம் என்னும் சதையில்லா
மீனுள் மூன்றே முட்கள்
--------------------------------------------
- உயிரின்றி போனவரை
காலமாகி போனாரென
சொல்லுதல் முரணே
எல்லாம் நின்று போனவர்
எப்போதும் நில்லா காலத்தோடு
எவ்வாறு ஒப்பாவார் ?
---------------------------------
- காலம் தான் பதில்
சொல்லும் என்று காலம்
காலமாக சொல்லி வருகிறார்கள்
காலம் பதில் சொல்லியிருக்கா ?
ஆம்
எல்லாம் கடந்து போகும்
----------------------------------------
- காலத்தால் அழியா எழுத்துக்கள்
காலத்தால் அழியா கவிதைகள்
காலத்தால் அழியா காதல்கதை
என்று போற்றி சொன்னதுண்டு
ஆனால் அழியாததென்றும் காலமே
---------------------------------------------
- என்னே புரிதல் தமிழர்களுக்கும்
தமிழ்மரபிற்கும் மரணத்தை
கொடியதாய் காட்டியது மேற்குலகம்
இங்கே மரண தேவனுக்கு
பெயர் " காலன் "
காலம் காப்பவனோ ?
காலத்தில் கடமை ஆற்றுபவனோ ?
----------------------------------------------------
- மரணம் ஒரு முடிச்சு
அவிழ்க்கும் தருணம்
காலம் தான் அவசியம்
மெய்ப்பொருள் களைந்து
செல்லும் கணமே மரணம்
----------------------------------------------------
- இயற்கை ஆடும் சீட்டாட்த்தில்
காலம் தான் தீர்மானிக்கும்
யாரைக் கவிழ்ப்பது யாரை
ஜோக்கராக வைத்து கொள்வதென்று
Comments
Post a Comment